Tuesday, December 31, 2013

மன்மதன்

மன்மதன்:

விஷ்ணுவின் மானச புத்திரன் மன்மதன். மன்மதனின் பாரி (மனைவி) ரதி. மன்மதன் என்பதன் பொருள் மனதுக்கு கிளர்ச்சியைக் கொடுப்பவன் என்பது. மன்மதனை பிரம்ம புத்திரன் என்று கூறுவாரும் உளர்.
ரிக் வேதம் பிரமசைத்தன்னியத்திலே முதலில் எழுந்தது ‘இச்சை’ என்று கூறியுள்ளது. காம-இச்சைக்கு அதிதேவதையாகிய மன்மதனே புராணங்களில் பெரும்பாலும் பேசப்படுபவன்.
மன்மதன் அழகோடு கூடிய யவ்வனத்தை (இளமையை) அதிகரித்து நின்று ஆண் பெண்ணைச் சேர்த்து பிரஜாவிருத்திக்கு (மக்கள் உற்பத்திக்கு) உபகாரம் செய்யும் அதிகாரமூர்த்தி. மன்மதன் அரூபியாய் (உருவம் இல்லாமல்) வசந்தகாலம், நிலாமணிமேடை, மணற்குன்று, பூஞ்சோலை, சந்திரோதயகாலம், புஷ்பம், வாசனை, அழகு இவைகளை தனக்கு பரிவாரமாகக் கொண்டிருப்பவன்.
தாரகாதி அசுரரால் வருந்திய தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதன் சிவபெருமான் மீது காமபாணங்களைச் செலுத்தி அவர் நெற்றிக்கண்ணுக்கு இரையாகி அங்கமிழந்து அநங்கன் என்னும் பெயர் கொண்டான்.
மன்மதன் பாரியாகிய ரதிதேவி, பார்வதியை கெஞ்சி தன் குறைகளைக் கூறினாள். பார்வதி, ரதியைத் தேற்றி, “உன் கணவன், கிருஷ்ணனுக்கு பிரத்தியுமனன் என்னும் பெயரோடு புத்திரனாகப் பிறப்பான். அந்தச் சிசுவை சம்பராசுரன் கவர்ந்து போய் கடலில் போடுவான். அந்த சிசுவை ஒரு மீன் கவர்ந்து விழுங்கும். அந்த மீனை ஒரு வலைஞன் பிடிப்பான். அந்த மீனை பிடித்துவந்து சம்பரனுக்குக் கொடுப்பார்கள். நீ அப்போது சம்பரன் வீட்டு வேலைக்காரியாக இருப்பாய். அப்போது இந்த மீனை நீ அறுத்து அதில் உள்ள சிசிவை எடுத்து கொள்வாய் அவனே உன் கணவன் மன்மதன். நீ அவனுடன் வாழ்வாய்” என்று கூறியருளினார்.

இந்தச் சரித்திரம் “வாமன பாகவத விஷ்ணு புராணங்களில்” கூறப்பட்டுள்ளது. ஸ்காந்த புராணத்திலே கூறப்பட்ட இந்த சரித்திரம் சற்று விகற்பமானது.

No comments:

Post a Comment