Thursday, December 19, 2013

அர்ச்சுனன் வெற்றிக்கு பின்னால் . . ..

அர்ச்சுனன் வெற்றிக்கு பின்னால் . . ..
பாண்டு மகாராஜாவுக்கு குந்தியிடத்தில் தேவேந்திரன் அருளால் பிறந்த புத்திரன் தான் இந்த அர்ச்சுனன். பாண்டவர்களுள் மத்தியமன் (அதாவது ஐவரில் மூன்றாவது மகன்). வில்வித்தையில் இணைஇல்லாதவன். இவன் பாரத யுத்தத்தில் ஒரேதினத்தில் ஏழு அக்குரோணி சேனா வீரர்களை சங்கரித்தவன் (ஜெயித்தவன்).
இவனின் அவதாரம்: நரன்’ என்னும் தேவரிஷி பாரதயுத்துக்காக அர்ச்சுனனாக அவதரித்தான் என்று கூறுவர். இவனுக்கு வில் காண்டீபம். சங்கு தேவதத்தம். இவனுக்கு பாரியர் (மனைவிகள்) திரௌபதி, உலூபி, சித்திராங்கதை, சுபத்திரை என நால்வர்.
அர்ச்சுனன் துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை பயின்றான். அப்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அர்ச்சுனனின் சாமர்த்தியத்தைக் கண்டு பொறாமை கொண்டு, அவனின் வேலையாட்களிடம் அர்ச்சுனனுக்கு விளக்கு இல்லாமல் போஜனம் படைக்க வேண்டாம் என்று கட்டளையிட்டான். ஒருநாள் அர்ச்சுனன் உணவு அருந்தும்போது விளக்கு அணைந்தது. அப்போது வெளிச்சமில்லாமலும் தனது கைகள் வேலை செய்வதைக் கண்ட அர்ச்சுனன், அதேபோல் வில் வித்தையும் இருளில் தன் கைகள் செய்யும் என கருதி இருளில் வில்வித்தை கற்று வந்தான். துருபதனை போரில் வென்று சிறை எடுத்து அவனை துரோணாச்சாரியார் முன் குருதட்சனையாக கொண்டுவந்து நிறுத்தினான். பாண்டுவாலும் வெல்லமுடியாத யவனராஜனை வென்றவனும் இவனே. வில்லாளர்கள் எல்லாம் திகைத்து நாணும்படி, ஒரே அம்பினால் மீன் எந்திரத்தை வீழ்த்தி திரௌபதையை மணம் புரிந்து வில்லுக்கு விஜயன் என பெயர் பெற்றவனும் இவனே.

பசுபதா அஸ்திரம் பெற்ற கதை: இவன் பாசுபதா அஸ்திரம் பெறும் பொருட்டு மகாதவம் செய்தான். ஒரு மூகன் பன்றி உருக்கொண்டு அவன் தவத்தை கலைக்க எத்தனித்தபோது, சிவன் வேடன் உருக்கொண்டு இதை துரத்தினான். சிவன் ஒரு கனை விடுத்தான். அர்ச்சுனனும் ஒரு கனை விடுத்தான். இரு கனைகளினாலும் பன்றி இறந்தது. சிவன், பன்றியை நான்தான் கொன்றேன் என்று விளையாட்டுக்காக சொன்னார். அர்ச்சுனன் தான் கொன்றதாகச் சொன்னான். இருவக்கும் பெரிய சண்டை நேரிட்டு, பின்னர் சிவன் தனது சுயரூபம் காட்டி பாசுபதம் என்ற அஸ்திரத்தை பெற்றான். இவன் பொருட்டேதான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை அருளினார்.

No comments:

Post a Comment