Monday, January 20, 2014

தோடுடைய செவியன் . . .

திருஞானசம்மந்தமூர்த்தி
சீர்காழியிலே சிவபாதர்-பகவதி என்ற பிராமணத் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தை மூன்று வயதாக இருக்கும்போதே தன் தந்தையுடன் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. வேறு வழியில்லாமல், அந்தக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, தந்தை குளத்தில் இறங்கி குளிக்கிறார். 

அவர் தண்ணீருக்குள் தலையை மூழ்கியதும், தந்தையைக் காணத குழந்தை அழ ஆரம்பிக்கிறது.  அதன் அழுகையைக் கேட்டு சிவன் தன் தேவியுடன் வந்து சிறுவனிடன் அமர்ந்தார். பார்வதி பொற்கிண்ணத்தில் தன் பாலைக் சுரந்து அத்துடன் ஞானத்தையும் சேர்த்து அந்தச் சிறுவனுக்கு ஊட்டிவிட்டு இருவரும் மறைகின்றனர்.

ஞானப்பாலை உண்ட சிறுவனின் வாயிலிருந்து பால் வடிகிறது. குளித்துவிட்டு வந்த தந்தை இதை கண்டு திகைக்கிறார். 'வழியில் யார் கொடுத்தாலும் பாலைக் குடிப்பாயா?' என்று கண்டிக்கிறார்.  'யார் உனக்கு பால் கொடுத்தது?' என்று கண்டிப்புடன் கேட்கும் தந்தைக்கு அந்த மூன்று வயது சிறுவன், ஆகாயத்தை நோக்கி தன் கையைக் காட்டி, "தோடுடைய செவியன் . . .. " என்ற பதிகத்தைப் பாடுகிறார் அந்த மூன்றே வயதான சிறுவன், திருஞான சம்மந்தர்.

இதுதான் இவர் முதன் முதலில் பாடிய தேவாரப் பாடல்.

“தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங் கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.”

தோடுடைய செவிகளை உடையவன்
விடை= தரும உருவமான ரிஷபத்தில் ஏறியவன்.
வெண்மையான சந்திர பிறை சூடி
உள்ளங்கவர் கள்வன் = மனதை வசப்படுத்தும் கள்வன்.
காடுடைய சுடலைப் பொடி பூசி = சர்வசங்காரம் என்னும் மயானத்தில் வெந்த திருநீறு பூசி
ஏடுடைய மலரான் முன்னைநாள் பணிந்தேத்த = ஏடுகளை உடைய மலரான தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவர் வழிபட்ட

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் = பெருமையுடைய சீர்காழியில் விளங்கும் பெம்மான் இவனே தான் அவன்!


No comments:

Post a Comment