Thursday, July 24, 2014

நினைவுகள்-17

நம்பிக்கை
நம்பிக்கை என்பது காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. நமக்கு முன் உள்ள காலத்தில், வாய்ச்சொல்லுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற உயிரையும் கொடுக்கத் துணிந்தனர். எனவே எந்த விற்பனைக்கும் வாய்சொல்லே பிரதானம். அது கடவுளுக்குப் பயந்த காலம்.

பின் உள்ள காலங்களில், இருவர் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றால், நடுவில் ஒரு சாட்சி வேண்டி இருந்தது. அந்த சாட்சியும் ஒரு தகுதியுள்ள நபராக இருக்க வேண்டும். அவர் முன்னர் செய்து கொண்ட அந்த ஒப்பந்தத்தை நம்பிக்கைக்கு உரியதாக கருதினார்கள். ஒரு பத்திரத்தை எழுதிக் கொள்ள வேண்டும் என்றால், அதில் கையெழுத்துப் போடவேண்டியவர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேனாவைப் பிடித்து அந்த பத்திரத்தில் ஒரு கீரல் (கோடு) செய்தால் போதும். அதை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் செய்தால் போதுமானது என பிரிட்டீஸ் அரசு சட்டமும் கொண்டு வந்தது. அந்த பத்திரத்தின் கடைசியில் அவ்வாறு கோடு செய்தோ, கையெழுத்துப் போடத் தெரிந்தவர் கையெழுதுத்துப் போட்டும் எழுதிக்  கொண்டார்கள். இதுகூட பேப்பர், பத்திரம் கண்டுபிடித்த காலத்துக்கு பின்னரே.

தற்போதுள்ள காலங்களில் பல தில்லுமுல்லுகள் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் நம்பும் காலமே இல்லை. பத்திரத்தின் எல்லாப் பக்கங்களில் கையெழுத்துப் போட்டாலும், அவரின் கைரேகை, போட்டோ, அடையாள அட்டை என்ற நவீன முறைகளுக்கு வந்துவிட்டாலும், ஆள் மாறாட்டத்துக்கும், பொய்களுக்கும் குறைவில்லை.

தான் எழுதிய பத்திரத்தையே, 'இது எனது கையெழுத்து இல்லை' என்று கூசாமல் பொய் சொல்கிறான்.

நம்பிக்கை எந்த அளவுக்கு வந்துவிட்டது என்றால், 'பணத்தைக் கொடு, பத்திரத்தில் கையெழுத்துச் செய்கிறேன்' என்கிறான் சொத்தை விற்றவன். சொத்தை வாங்குபவனோ, 'பத்திரத்தில் கையெழுத்தைப் போடு, நான் பணத்தைத் தருகிறேன்' என்கிறான். இதில் எதை முந்திச் செய்ய வேண்டும்? எதையுமே முந்திச் செய்ய முடியாது. ஒருவருக்கு ஒருவர் சிறிது நேரம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, நடுவில் ஒரு நியாயஸ்தன் இருக்கத்தான் வேண்டும். நம்பாமல் வாழவே முடியாது. அந்த நம்பிக்கையை யார் மேல் வைக்கலாம், யார் மேல் வைக்கக் கூடாது என்பது நமது அறிவும், அனுபவமும் சார்ந்த விஷயம்.

.

No comments:

Post a Comment