Tuesday, August 12, 2014

நினைவுகள்-27 ஆன்மாவின் அறிவு

இப்பிறவியின் ஆன்மாவின் அறிவு:

இங்கு இந்தப் பிறவியில் நாம் தேடிக் கொள்ளும் அறிவு எல்லாம் என்ன ஆகும்? கூடவே அடுத்த பிறவிக்கு வருமா? இல்லை, இந்தப் பிறவியிலிலேயே இந்த உடம்புடனே இங்கேயே அழிந்து விடுமா?
இங்கேயே அழிந்துவிடும் என்றால், அதற்கு எதற்காக இவ்வளவு அறிவை தேடித் தேடி தேடிக் கொள்ள வேண்டும்.

இங்கேயே அழிந்துவிடுவதில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. சிறுவயதிலேயே மிகப் பெரிய சாதனை செய்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் அனைவருமே ஆன்மா வழியே அறிவை கொண்டு வந்தவர்களாகவே இருப்பார்கள் போலத் தெரிகிறது. அவர்கள், நிச்சயம் இங்கு தேடிய அறிவாக இருக்க முடியாது.

ஆன்மா, உருவமுள்ள பொருள் இல்லையாம். உடம்பு இல்லை, மனம் இல்லை. பின்? உயிர் உள்ள பொருள்களில், உயிர் உடலுடன் இருக்கும் போது, அந்த உடலும், மனமும் அனுபவிக்கும் அனுபவத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இந்த ஆன்மா. எனவே உடலும், உயிரும் இல்லாதபோது, அது பயணத்தை தொடங்கி விடுகிறது. அடுத்த உடல், உயிர் தேடுகிறது. இதுவே 'ஜீவாத்மா.' இது வந்த வேளையை முடிக்காமல் 'பரமாத்மாவுடன் சேராது போல!'

பிறக்கும்போது, கருவில் முதலில் உடல் உருவாகிறதா, இல்லை உயிர் உருவாகிறதா? தெரியவில்லை. பின், எப்போது இந்த ஆன்மா உயிருள்ள உடம்பில் சேர்கிறது? தெரியவில்லை.

ஆன்மா வரும்போது அறிவுடன் தான் வருகிறது.
ஜெர்மன் விஞ்ஞானி சொல்கிறார். (Dr. Kant). ஒரு பசுமாடு, கன்றுக் குட்டியை ஈனும்போது, அந்தக் கன்றுக் குட்டி வெளியே வந்தவுடன், சிறிதுநேரம் தன் கால்களில் நிற்க முடியாமல் தள்ளாடி, பின் சமாளித்து நின்று கொள்கிறது. இன்னும் சிறிது நேரத்தில், ஆச்சரியப்படும் வகையில், அந்த கன்றுக் குட்டி, தன் தாயின் கால்களுக்கு நடுவில் இருக்கும் மடுவை தன் முகத்தால் முட்டி, வாயால் பாலைக் குடிக்கிறது. இது இயல்பு. இந்த இயல்பை, அந்தக் கன்றுக் குட்டிக்கு யார் கற்றுக் கொடுத்தது? தாய் கற்றுக் கொடுக்கவில்லை. கன்றுக் குட்டிக்கு, தன் தாயின் மடுவில் பால் குடிக்க வேண்டும் என்றும், அந்தத் தாயின் மடு, அதன் கால்களுக்கு நடுவில்தான் உள்ளது என்றும் அந்தக் கன்றுக் குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்?

அதன் ஆன்மாவில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள நினைவுகளின் அடிப்படையில் இது நிகழ்கிறதோ? அப்படியென்றால், ஆன்மாவில் ஏற்கனவே நிகழ்வுகள் பதியப் பட்டே அவை இங்கு வருகின்றன என்று நினைக்கலாமா?

மகாபாரதத்தில், அம்பையை, பீஷ்மர் மணக்க மறுத்த கோபத்தில், அவரை கொல்வேன் என சபதம் செய்து, இப்பிறவியில் (ஒரு ஆணோ, பெண்ணோ) அவரைக் கொல்ல முடியாதாம் என்ற நிலையில் தீக்குளித்த அம்பை, மறுபிறப்பில் அதே நினைவில் ஒரு ஆணுமற்ற, பெண்ணுமற்ற நிலையில் பிறந்து பீஷ்மரைக் கொன்றாள். அவளின் ஆன்மா, முன்பிறப்பின் நிகழ்வை மறக்காமல் வைத்திருந்தது. அதற்கான வழியைத் தேடித்தந்தது.


இப்பிறவியில் நாம் அடையும் எல்லா அனுபவங்களும் நமக்குத் தேவையே! இவைகள் அடுத்த பிறவியின் அடித்தூண்கள்!
.

No comments:

Post a Comment