Sunday, August 10, 2014

வடகலை, தென்கலை வழக்கு

வடகலை, தென்கலை -வழக்கு
வைஷ்ணவ கோயில்களில் யாருடைய மந்திரத்தை சொல்வது என்பதில் பலகாலப் பிரச்சனை இருந்து வந்தது. லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் கோர்ட் தீர்வு கொடுக்கிறது.
பிரைவி கவுன்சில் வழக்கு PC Appeal No.33 of 1943
His Holiness பெரிய கோயில் கேள்வியப்பன் திருவேங்கட ராமானுஜ பெரிய ஜீயங்காருலு வாரு -- அப்பீல் செய்தவர்.
-எதிர் பார்ட்டி-
பிரதிவாதி பயங்கரம் வெங்கடசாருலு மற்றும் பலர். -- எதிர்பார்ட்டிகள்.

இந்து மதக் கோட்பாட்டின்படி, இறைவன்  மூன்று நிலைகளில் இருக்கிறான்.
பிரம்மா, உருவாக்குபவர்;
விஷ்ணு, காப்பவர்;
சிவன், அழித்துச் சரிசெய்பவர்.
The Deity manifests Himself in three aspects as Brahma, the Creator, Vishnu, the Preserver, and Siva, the Destroyer and Renovator.
இதில் விஷ்ணுவை வழிபாடு செய்துவருபர்கள் வைஷ்ணவர்கள். 

தென்னிந்தியாவில் விஷ்ணுவுக்கு பலகோயில்கள் உள்ளன.  2500 வருடங்களுக்கு முன்பிருந்தே சமஸ்கிருத (Sanskrit) வேதங்களும், மந்திரங்களும் விஷ்ணு வழிபாட்டுக்காக இருந்து வருகின்றன. இதுபோலவே தென்னிந்தியாவில் 4000 பிரபந்தங்கள் தமிழில் உள்ளன. இவைகளை விஷ்ணு பக்தர்களான ஆழ்வார்கள் பாடிச்  சென்றுள்ளனர்.

விஷ்ணு வழிபாட்டு முறைகளை வகுத்துச் சென்ற ஆச்சாரியர்களில் முக்கியமானவர்கள்:
கி.பி. 1017 - 1137ல் வாழ்ந்த ராமானுஜர்.
கிபி 1268-1369ல் வாழ்ந்த  வேதாந்த தேசிகர்.
கிபி 1370-1443ல் வாழ்ந்த மணவாள மகாமுனி.
ஆச்சாரியர்கள் 'ஸ்தோத்திர பதங்கள்' என்றும், ஆள்வார்கள்  'பிரபந்தங்கள்' என்றும் இறைவனை போற்றிப்பாடும் பாடல்கள் இயற்றி, அவைகளை வழிபாட்டு முறையாக உபயோகித்து வந்துள்ளனர்.

14-வது நூற்றாண்டில் இந்த வைஷ்ணவர்களுக்குள் இந்த வழிபாட்டு முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஒரு கூட்டம், வேதாந்த தேசிகரின் சமஸ்கிருத வேதத்தை பின்பற்றி வழிபாடு செய்தது. இவர்களை 'வடகலை' என்று அழைத்தனர். மறுகூட்டம், ஆள்வார்களின் பிரபந்தத்தை வழிபாட்டு முறையாக கொண்டது. இவர்கள் மணவாள மாகமுனியை பின்பற்றியவர்கள். எனவே இவர்கள் 'தென்கலை'.

மதராஸ் பிரசிடென்சியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 18 விஷ்ணு கோயில்களில், 5 கோயில்கள் திருமலை சேர்ந்தது, 13  கோயில்கள்  திருப்பதி சேர்ந்தது. இவைகள் அனைத்தும் 'அடயபாகம்' என்ற தலைமையின் கீழ் இயங்கியது. அதன் தலைவர் 'பெரிய ஜீயங்கர்.' இவர் தென்கலை. இவருக்கு துணையாக இருப்பவர்கள் 4 ஏகாங்கிகள், மற்றும் சில சின்ன சின்ன ஆச்சாரிய புருஷர்கள். இவர்களை எல்லோரையும் சேர்த்தே 'அடயபாக கோஷ்டி' என்பர்.
வழிபாட்டு முறையில் குழப்பம்:
தென்கலை முறை:
பெரிய ஜீயங்கர் இந்த பூஜையை ஆரம்பித்து வைப்பார். அப்போது 'சாதித் அருளா' என்று சொல்லி ஆரம்பிப்பார். இதை தொடர்ந்து 5 பாடல்கள் (மந்திரங்கள்) பாடுவர். இது தென்கலை முறைப்படி 'ஸ்ரீ சைலேசா தயாபத்ரம்' என்று தெடங்கும். அதில் தென்கலை குருவான மணவாள மகாமுனியின் பாடல்கள் இருக்கும்.
வடகலை முறை:
 இதில் வழிபாட்டின் முதல் பாடல், 'ராமானுஜ தயாபத்ரம்' என்று தொடங்கும். இதில் வடகலை குருவான வேதாந்த தேசிகரின் பாடல்கள் இருக்கும்.
மீதி உள்ள 4 பாடல்கள் இறைவனை வணங்கும் பொதுவான பாடல்களே. வழிபாட்டு முடிவில், இறைவனுக்கு 'வாழி' பாடுவர். இதற்கு 'வாழி திருநாமம்' என்று பெயர். இது மொத்தம் 9 பாடல்கள். இதில் முதல் நான்கு பாடல்கள் பொது. மீதி 5 பாடல்களில்தான் பிரச்சனையே.
இந்த கடைசி 4 வாழி பாடல்கள் பாடும்போது தென்கலை பாடல்களை பாடுவர். வடகலை ஆச்சாரியர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.  ஆனால் அப்போது வடகலை ஆச்சாரியர்களும் சேர்ந்து அவர்களின் வாழி பாடல்களை பாடுவர். இது வேண்டுமென்றே பாடப்படுவதால், ஒரு குழப்பமாக இருந்துவிடும்.
வழக்கு:
வடகலைக்கு இப்படியொரு பழக்கம் இல்லை என்றும், இதை அவர்கள் கோயிலில் பூஜையில் பாடக் கூடாது என்றும், மற்ற நேரங்களில் பாடிக் கொள்ளலாம் என்றும், எதிர்த்து வட ஆற்காடு சப்-கோர்ட்டில் வழக்கு. பழைய பழக்க-வழக்கங்களை கோர்ட் ஆராய்ந்து தென்கலை முறையே சரி என்றது. அதை எதிர்த்து மதராஸ் பிரசிடென்சி ஐகோர்ட்டுக்கு அப்பீல் வழக்கு. அங்கும்  "திருமலையிலும், திருப்பதி கோயில்களிலும் வடகலை ராமானுஜ தயாபத்ரத்தை'  அனுஷ்டிப்பதில்லை. காலங்காலமாக திருச்சானூர், திருமலை, திருப்பதி கோயில்களில் இந்த தென்கலை முறையே பின்பற்றப் பட்டு வந்திருக்கிறது என்று மதராஸ் ஐகோர்ட் கூறிவிட்டது.
லண்டன் பிரைவி கவுன்சில் அப்பீல்:
இதற்கு முன் 1887-1893ல் திருச்சானூர் கோயிலில் இதுபோல் ஒரு வழக்கு வந்தது. அதில் திருச்சானூர் கோயிலில் முழுக்க முழுக்க தென்கலை மந்திரமே சொல்லப்பட்டு வருகிறது என்றும், திருச்சானூர் பழக்கமே, திருமலையிலும் திருப்பதியிலும் பின்பற்றப் படுகிறது என்றும் தீர்ப்பு உள்ளது.
மற்றொரு வழக்கில் (Krishnasami v. Krishnama, 1882 ILR 5 Mad 313) காஞ்சிபுரத்திலுள்ள பெரிய கோயிலில் தென்கலை முறையே உண்டு. வடகலை முறையை தடைசெய்ய இந்த வழக்கு வந்தது. அதில் முழுக்க முழுக்க தென்கலை முறையே சரி என்று தீர்ப்பு.
மற்றொரு வழக்கில் (Srinivasa Thathachariar v. Srinivasa Aiyangar, 1899, 9 Mad LJ 355)  இதில் திருநெல்வேலி கோயிலில் தென்கலை மந்திரமே சொல்லவேண்டும் என்றும் வடகலை மந்திரத்தை சொல்ல உரிமையில்லை என்றும்,  வாழி மந்திரம் சொல்லும் போது, வடகலை ஆச்சாரியர்கள் அதை அவர்கள் வேண்டுமென்றே சேர்ந்து உச்சரிக்கக் கூடாது என்றும் ஐகோர்ட் தீர்ப்பு உள்ளது.
இவ்வாறு பல தீர்ப்புகளை ஆராய்ந்து, பிரைவி கவுன்சில், முடிவாக:
  1. தென்கலை முறையே சரி; 'சாதித் அருளா' சொன்னவுடன் தென்கலை மந்திரங்களே தொடங்க வேண்டும்.
  1. வடகலை மந்திரங்களை  திருப்பதியில் 'தர்மபுரி, கோடிகன்னிகாதானம், தோமாலை' (Dharmapuris, Kotikannikadanams and Thomalais) இவைகளில் தவிர வேறு எங்கும் சொல்லக் கூடாது.
  1. வாழி திருநாமம் எப்போது சொன்னாலும், தென்கலை மந்திரத்துடனேயே சொல்லவேண்டும்.
  1. திருமலை சேர்ந்த திருப்பதி, திருச்சானூர் வாழும் தென்கலை பண்டிதர்கள் எப்போதும் தென்கலை மந்திரம் சொல்ல உரிமையுண்டு. அதில் வடகலை மந்திரம் சொல்லி குழப்பக் கூடாது.
  2. பெரிய ஜீயங்கர் தலைமையில் இவை நடக்க வேண்டும்.
*****
தன் மகன்/மகள் என்பதில் தாய்க்கும் தந்தைக்கும் பிரச்சனையேயில்லை; ஆனால், '"அவன்/அவள், என் சொல்படிதான் கேட்பான்/கேட்பாள்" என்று நினைப்பதில்தான் பிரச்சனையே.

"இந்த மகா விஷ்ணு, யார் பிள்ளையோ, தெரியவில்லை!"

.

No comments:

Post a Comment