Friday, March 25, 2016

தமிழ் ஊமை


தமிழ் ஊமை

("உலகளாவிய தமிழ்" என்ற நூலுக்கு ஈழத்து பூராடனார் எழுதிய ஆசிரிய ஆதங்கம் என்ற பகுதியின் ஒரு சிறு பகுதி)

“விவாகத்தின் பின்னர், குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வந்த எனது நண்பரொருவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தாயகத்திற்கு திரும்பினார்; அப்போது எனது வீட்டிற்கு அவரின் 10 வயது மகனுடனும், 8 வயது மகளுடனும், தமிழ்ப் பண்பாடு மாறாத அவரின் மனைவியுடனும் வந்திருந்தார்;

எனது பிள்ளைகள் அவர்களுடன் கூடி விளையாடினர்; அதன்பின், என் பிள்ளைகள் என்னிடம் வந்து, “அப்பா! இவர்களுக்கு ஒரு தமிழ்ச் சொல்கூட தெரியவில்லை; அப்பா அம்மா என்பதைக் கூட டடா, மமி என்றுதான் சொல்கிறார்கள்” என்று கூறினர்;

தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த இந்தப் பிள்ளைகளுக்கு அதுவும் தமிழாசியர் குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்குப் பிறந்த பிள்ளைகள் தமிழ் தெரியாமல் இருப்பது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை;

சற்று நேரத்தின் பின்பு அவர்களுடன் உரையாடிய பின்னர், எனது சந்தேகம் தெளிந்தது; தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாத நிலை என்பது எனக்கு அதிர்ச்சியை ஊட்டியது; என் மனதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், “என்ன நண்பரே! இவ்வளவு அழகான குழந்தைகளைப் பெற்று இருக்கிறீர்கள்; ஆனாலும் அவர்கள் “ஊமையாக” இருப்பதைக் கண்டு மனம் வருந்துகின்றேன்” என்று சொன்னேன்;

நண்பர் சற்று அசந்து போனார்; பின்பு, ஆத்திரத்துடன் என்னிடம், “என் பிள்ளைகள் பேசுவது உமக்கு கேட்கவில்லையா? உமது காது செவிடாகி விட்டதா? அதுவும் பெற்றோராகிய எங்களிடமே எங்களின் பிள்ளைகள் ஊமை என்று சொல்லிகிறீர்களே?” என்று ஆத்திரமாகக் கேட்டார்;

“நீ சொல்வது சரிதான்! ஆனால், உன் பிள்ளைகளுக்கு தமிழ் பேசவே தெரியவில்லையே! அப்படியென்றால், அவர்கள் தமிழில் ஊமைகள்தானே!” என்று கேட்டேன்;

இப்படி நான் பேசியதால், என் நண்பருடனான உறவு முறிந்து விட்டது; நாங்களும் நட்பில் ஊமைகள் ஆகிவிட்டோம்;

இன்றும் லட்சக்கணக்கான “தமிழ் ஊமைகள்” உலகில் வாழ்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் மாத்திரமின்றி பெற்றோர்களும் தமிழ் ஊமைகள்தாம்! பெயரளவில்தான் தமிழர்; செயல் அளவில் அவர்கள் யாரோ பிற இனத்தவர்கள்; பேசும் மொழி தமிழ் அல்ல! வாழும் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை அன்று! இவர்களைப் பார்க்கும்போது, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற பாரதியின் கோபம்தான் நினைவுக்கு வருகிறது;"

**

No comments:

Post a Comment