Saturday, March 26, 2016

இராமன்--சீதையின் விமானப் பயணம்


இராமன்--சீதையின் விமானப் பயணம்

புஷ்பக விமானத்தில் அமர்ந்து இராமனும், சீதையும், மற்றவர்களும் இலங்கையிலிருந்து அயோத்திக்கு வருகிறார்கள்;

இராமன், தன் மனைவி சீதைக்கு, வழியில் காணும் சிறப்புகளை எல்லாம் காட்டி ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வருகிறார்;

"சீதையே! சமுத்திரத்திலே திமிங்கிலங்கள் துள்ளி விளையாடுவதைப் பார்!  கடற்கரையில் தோன்றும் கமுகம் சோலையைப் பார்! என் மனதைப் போலச் செல்லும் நம் புஷ்பக விமானத்தைப் பார்! அது, சில இடங்களில், தேவர்கள் செல்லும் பாதையில் செல்வதைப் பார்! சில இடங்களில், அது காட்டு வழியில் செல்வதைப் பார்! சில இடங்களில் பறவைகள் செல்லும் வழியில் செல்வதைப் பார்! இங்கே உன்னுடைய கால் சிலம்பு வீழ்ந்த இடத்தைப் பார்!  பல குவளை மலர்கள் மலர்ந்திருக்கும் பம்பை வாவியைப் (குளத்தைப்) பார்! பஞ்சவடியிலே, கோதாவரி ஆற்றங்கரையிலே, நாங்கள் இருந்த பிரப்பங் கொடி வீட்டைப் பார்! சாதகர்ண முனிவருடைய சலக்கிரீடை வாவியைப் பார்! இங்கே தோன்றும் சுதீக்கண முனிவருடைய பர்ணசாலையைப் பார்! அத்திரி முனிவருடைய ஆசிரமத்தைப் பார்! இங்கே, கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்றும் கூடுகின்ற சங்கமம் தோன்றுவதைப் பார்! எதிரே வருகின்ற சரயு நதியையும் பார்!" என்று ஒவ்வொன்றின் சிறப்புகளையும் இராமன், சீதைக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே போகிறார்;

அப்போது, அயோத்தி நகர் மிக அருகில் வந்துவிட்டது புஷ்பக விமானம்;
நந்தி கிராமத்திற்கு வந்து இருந்த பரதனும், வசிட்ட முனிவரும், மந்திரிகளும், சேனைகளும், எதிர்கொண்டு வரவேற்றனர்;

இராமன் விமானத்திலிருந்து இறங்குகிறார்; முதலில் வசிட்டரை வணங்கினார்; பின்னர் பரதனைத் தழுவினார்இராமனை, மந்திரிகள் வணங்கினார்கள்; இலக்குமணர், பரதனை வணங்கினார்; பரதனும் சீதையை வணங்கினார்; சுக்ரீவன் முதலியவர்களை இராமன், இன்னாரென்று பரதனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்; பின்னர் அந்தப்புரத்திலிருந்த தாய்மாரும் கண்டு கொண்டாடினர்;

அன்றைய காலத்திலும் இதேபோன்ற Protocol முறையே சரியாக கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றன;

பின்னர், இராமனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது;
சிலநாட்கள் கழித்தபின்னர், சீதை கர்ப்பவதியானார்........

**

No comments:

Post a Comment