Sunday, May 1, 2016

யோகாப்பியாசம்

யோகாப்பியாசம் செய்யும் போது, மனம் ஒரு நிலையில் நில்லாது பலவிடத்தும் தத்தும்! அதனால் சுவாசத்தை ஒழுங்கு படுத்தல் கஷ்டம்!

சூரிய உதயத்துக்கு ஐந்து நாழிகைக்கு முன்னும், சூரிய அஸ்தமனத்துக்கு ஐந்து நாழிகைக்குப் பின்னும், ஒவ்வொரு நாழிகை அப்பியாசம் செய்ய வேண்டும்!

இந்த நேரங்களில்தான் பூமியில் உள்ள சகல சராசங்களும் ஒடுங்கும்!  நிர்ச்சத்தமான நேரம்!  அந்நேரத்தில் இயல்பிலேயே மனமும் ஒடுங்கும்! மனம் ஒடுங்கும் காலமே யோகப்பியாசத்துக்கு உகந்தது!

சூடாவது குளிராவது அணுகாத, மனிதர்கள், மிருகங்கள் சந்தடி இல்லாத ஓர் இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்; அந்த இடத்தில் தர்ப்பைப் புல்லை போடவேண்டும். (முன் காலங்களில் மான்தோல், புலித்தோல் போட்டுக் கொண்டனர்); மின்னலில் உள்ள மின்சாரத்தை நம் உடம்பு கவர்ந்து பூமிக்கு விடுவது இயல்பு; அவ்வாறு மின்சாரம் நம் உடம்பில் ஓடாமல் தடுப்பதற்கு இந்த ஆசனங்கள் (தர்ப்பை, புலித்தோல், மான்தோல்) இன்றியமையாதன; நம் உடல், மின்சாரத்தை மேலிருந்து கீழே போகவிடும்போது, அது கீழிலிருந்து மேலே இழுக்கப்படும் சுவாசத்தோடு முனைந்து எதிரான சக்திகள், ஒன்றையொன்று தாக்கும்; அப்போது அப்பியாசத்துக்கு பங்கம் வரும்!

பதுமாசனம்:
பதுமாசத்தில் இரண்டு வகை உண்டு;
இரண்டு கால்களையும் மடக்கி ஒரு குதிக்காலால் அபானத்தை (மலவாயிலை) அடைத்து, மற்ற குதிக்காலால் சலவாயிலை அடைத்து, பாதங்களின் முன்பக்கத்தை தொடைக்கும், காலுக்கும் இடையில் சொருகி, முதுகெலும்பு வளையாது நிமிர்ந்திருக்க வேண்டும்;

தேகத்தில் பத்து வாயுக்கள் இருக்கின்றன; ஒரே வாயுவாய் இருந்தாலும், அது தொழில் செய்யும் இடங்களை வைத்து பத்து பெயர் பெறுகின்றன; இந்த பத்து வாயுக்களும் சுவாசத்தோடு சம்மந்தப்பட்டவை; இரண்டு அபானத்திலும் (மலத்துவாரம்) குறியிலும் நின்று தொழில் செய்வன; அவைகள் சுவாத்தில் மொத்துண்டு வெளியேற எத்தனிக்கும்; இதில் வாயு வெளியேறினால், சுவாசத்தை கட்டுப் படுத்த முடியாது; எனவே அவைகள் இரண்டையும் குதிக்கால்களால் தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்;

முதுகெலும்பு நேராய் இருந்தால்தான், மூலாதாரத்திலிருந்து செல்லும் வாயுவும் நீரும் விரைவாய் ஓடும்; வளைவாய் இருந்தால் ஓட்டம் தடைபடும்;

பின்னர் சுவாசத்தப் பழக்க வேண்டும்; இடகலையால் விட்டு பிங்கலையால் இழுக்கவும், பிங்கலையால் விட்டு இடகலையால் இழுக்கவும் பழக்க வேண்டும்; மறுபடியும் இடகலையால் விட்டு இடகலையால் இழுக்கவும், பிங்கலையால் விட்டு, பிங்கலையால் இழுக்கவும் பழக்க வேண்டும்;

வாயைத் திறக்காமல், நாக்கை உபயோகித்து உள்ளிருந்து வரும் சுவாசம் ஹம் என்ற ஓசையுடன் வெளியே போக வேண்டும்; வெளியிலிருந்து உள்ளே செல்லும் காற்று "ஸா" என்னும் ஓசையுடன் போகவேண்டும்;

அப்பியாசத்தின் ஆரம்பத்தில், இரண்டு கண்களையும் மூக்கு நுனியைப் பார்க்கும்படி பார்வையை உள்ளே செலுத்தி பார்க்க வேண்டும்; முடிவில், முழுப்பார்வையையும் லலாடஸ்தானத்தை பார்க்க வேண்டும் (லலாட ஸ்தானம் = நாசி முடிவில் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடம்);

இயல்பிலேயே சுவாசமானது, மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு மேலே ஒடி, நாசி வழியாய் வெளியே போகின்றது; வெளியே இருந்து உள்ளுக்கு செல்லும் காற்றும் மூலாதாரத்துக்குப் போய் மீளுகின்றது; யோகிகள் படிப்படியாக காற்றை மூலாதாராத்துக்கு போகவிடாது தடுத்து, அதற்கு மேலே உள்ள ஆதாரத்தில் நிறுத்தி, அதை மறுபடி அதிலிருந்து மீளச் செய்கிறது; இவ்வாறு நாசிக்கு மேலே போய் அவ்விடத்தில் தங்கிவிட்டால், வெளியிலிருந்உத காற்று உள்ளே வருவதுமில்லை, உள்ளுக்குப் போவதுமில்லை; சுவாசமே இருக்காது; அதே நிலையில் அநேக நாட்கள், வருடங்கள் கழியும்; இப்படி இருப்பவர்களுக்கு உலகில் நடக்கும் சம்பவங்கள் ஒன்றும் புலப்பட மாட்டா;

**

No comments:

Post a Comment