Sunday, October 2, 2016

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்
(Shakespeare’s Hamlet)

ஷேக்ஸ்பியர் நாடகங்களிலேயே மிக அதிகமாகப் படிக்கப்பட்ட நாடகம் இந்த ஹாம்லெட் என்பார்கள்; ஏனென்றால் அதில் ஏதோ ஒரு சோகம் இழையோடி இருக்குமாம்!

இளவரசன் ஹாம்லெட் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருக்கிறான்; திடீரென்று தகவல் வருகிறது; அவனின் தந்தை (மன்னர்) இறந்து விட்டார் என்றும் உடனடியாக டென்மார்க்கு திரும்பி வரும்படி தகவல்; பதறி விட்டான் சிறுவன் ஹாம்லெட்; டென்மார்க்குக்கு திரும்பி வருகிறான்; தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறான்;

அங்கு அவன் தாயாரைப் பார்க்கிறான்! ஆறுதல் சொல்வதற்காக! ஆனால் அதிர்ச்சி அடைகிறான்! அவனின் தாய் (Gertrude), அதற்குள் மறு திருமணம் செய்து கொண்டு விட்டாள்! வேறு யாருமல்ல, அவனின் தகப்பனின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்! அவனுக்குச் சித்தப்பன்; அவன் பெயர் Claudius. கிளாடியஸ்;

முறைப்படி, மன்னர் இறந்துவிட்டால், அவரின் மகன்தான் அரியனை ஏறவேண்டும்; அதன்படி ஹெம்லெட்தான் அடுத்த மன்னர் ஆக வேண்டியவன்; ஆனால், சித்தப்பன் அந்த பதவியைப் பிடித்துக் கொண்டான்; அவனே முடிசூடிக் கொண்டான்; இவனின் தாயையும் மறு திருமணம் செய்து கொண்டான்; வெறுத்து விட்டான் ஹேம்லெட்! திருமணமே கொச்சைப் படுத்தப்பட்டு விட்டதோ என்று கலங்குகிறான்! இதில் ஏதோ சூதும் இருக்கக்கூடும் என நினைக்கிறான்!

இவன் சந்தேகப்படுவது போலவே, இவனின் இறந்த தந்தை ஆவியாக அங்கு வந்து செல்கிறார்! இவனைப் பார்க்கிறார்! அசரீரி கேட்கிறது! மகனே! என் ஆன்மா சாந்தி அடைய மறுக்கிறது! ஏனென்றால், நான் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கிறேன் என்று மகனிடம் தந்தையின் ஆவி அழுகிறது!

இதைப்பற்றி நம்பிக்கையானவர்களிடம் பேசுகிறான்! சித்தப்பன் கிளாடியஸ் காதுக்கும் செய்தி எட்டிவிட்டது! தகப்பன் ஆவி வந்து மகனே! என் உன் சித்தப்பன்தான் என்னை கொலை செய்தான்; நான் தூங்கும்போது, என் காதில் விஷத்தை ஊற்றி கொன்றான்! என்று சொல்லி இருக்கிறதாம்! மகன் பலிவாங்கத் திரிகிறான் என்றும் தகவல்!

ஹேம்லெட்டுக்கு வேறு வழி தெரியவில்லை! துக்கம் தாளாமல் ஒரு சர்ச்க்குப் போய் அங்கு சிலகாலம் வசித்து வருகிறான்; இரவில் ஒரு ஆற்றங்கரை ஓரம் நடந்து போகிறான்! அங்கு இறந்த அவனின் தந்தையின் ஆவி வருகிறது... மகனே! என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை; என் இறப்புக்கு காரணமானவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும்; உன் சித்தப்பனான என் தம்பி கிளாடியஸை பழி வாங்கிவிடு! உன் தாயான, என் மனைவி கெட்ரூட் (Gertrude) என்ன கதியாவது ஆகிவிட்டுப் போகிறாள்! கடவுள் அவள் முடிவை எடுத்துக் கொள்ளட்டும்! என்று புலம்புகிறது தந்தையின் ஆவி!

ஹேம்லெட்டால் நிலை கொள்ள முடியவில்லை! பழி உணர்ச்சி பெருக்கெடுக்கிறது; பைத்தியம் பிடித்துவிடும்போல உள்ளது! முகமூடி அணிந்து கொள்கிறான்! அதனுடனேயே நடமாடுகிறான்! அப்போதுதான் மற்றவர் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறான்;

மறுபடியும் குழப்பம்! உண்மையில் ஆவியாக வந்தது தன் தந்தைதானா என்று குழப்பம்! ஒருவேளை, வேறு ஏதாவது ஒரு கெட்ட ஆவி, என்னிடம் வந்து இப்படி குழப்பி விட்டு போய் இருக்கிறதா? ஒன்றும் விளங்கவில்லையே என்று குழம்புகிறான்!

நான், என் சித்தப்பனை கொல்வதால், பிரச்சனை தீர்ந்துவிடுமா? என் மனதில் உள்ள குழப்பம் நீங்கி விடுமா?... இல்லை, நான் கோழையாகி விட்டேனா?

உண்மையில் அந்த ஆவி என் தந்தையின் ஆவிதானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! நாடக நடிகர்களை கூப்பிடுகிறான்; The Murder of Gonzago என்ற நாடகத்தை நடத்துகிறான்; அதில் இவன் தகப்பன் கொலை செய்யப்படுவது போன்ற காட்சிகளை சேர்த்து அரங்கேற்றுகிறான்; இந்த புதிய நாடகத்துக்கு The Mousetrap என்று பெயர் வைக்கிறான்; (எலிப்பொறி என்ற பெயராக இருக்கலாம்); தன் சித்தப்பனும் அந்த நாடகத்துக்கு வருகிறான்; நாடகத்தைப் பார்த்த அவன் சித்தப்பனின் முகபாவனை மாறிவிட்டது; ஹேம்லெட் உடனே அந்த நாடக கொட்டகையை விட்டு வெளியே வருகிறான்! அவனால் மூச்சு விட முடியவில்லை! ஆம், என் சித்தப்பன்தான் வில்லன்! என் சித்தப்பனை கொல்ல வேண்டும்! மனம் முடிவெடுத்து விட்டது! ஆனால் மனச்சாட்சி எப்போதும் நம்மை கோழையாக்கிவிடும் என்பதை உணர்கிறான்! குழப்பத்தில் கொலை செய்ய முடியாது!

குழம்பி நிலையிலேயே, ஆறு வேறு வேறு கொலைகளைச் செய்கிறான்! முதல் கொலை போலோனிஸ் என்பவனை; அவன், இவனை வேவு பார்த்தான் என்று கொன்றான்; இதை சித்தப்பன் தெரிந்து கொண்டு, இவனை இங்கிலாந்துக்கு நாடு கடத்தி விட்டான்! அங்கு தன் பால்ய நண்பர்களை அழைத்து அவர்களை, டென்மார்க்குக்குப் போய் தன் சித்தப்பனை வேவு பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தான்! ஆனால் சித்தப்பனோ, இங்கிலாந்து மன்னர் மூலம் ஹேம்லெட்டை தூக்கிலிடும்படி கூறி இருந்திருக்கிறான்! ஆனால், ஹேம்லெட்டுக்குப் பதிலாக அவனின் இரு நண்பர்களை தூக்கில் போட்டு விட்டனர்!

ஹெம்லெட்டால் கொல்லப்பட்ட போலோனியஸ் என்பவரின் மகள் ஒபெலியா (Ophelia); இவள் ஹேம்லெட்டை காதலிக்கிறாள்! ஒபெலியாவுக்கு ஒரு சகோதரன், அவன் பெயர் லார்டெஸ் (Laertes);

ஒபெலியா ஒருபக்கம் தந்தை இறந்த வருத்தம்; மறுபக்கம் ஹெம்லெட்டின் மீது தீராத காதல்! ஆனால், ஒபெலியாவின் சகோதரன் நினைக்கிறான், இந்த ஹேம்லெட் நல்லவன் இல்லை, அவன் என் தங்கையை காதலிப்பதுபோல நடித்து, ஆசையை தீர்த்துக் கொண்டு தூக்கி எறிந்து  விடுவான் என்று எண்ணுகிறான்; ஆனால், ஹெம்லெட்டுக்கு ஒபெலியா மீது காதல் ஏதும் இல்லை; இந்த ஒபெலியா ஒரு சாகசக்காரி! இவள் காதலிப்பதாக சொல்லிக் கொள்வது எல்லாம் பொய்; இவளுக்கு ஒரு ஆண் வேண்டும் என்பதால் என் பின்னே சுற்றுகிறாள் என்று அலட்சியமாக எண்ணுகிறான் ஹேம்லெட்;

லார்டெஸ், (ஒபெலியாவின் சகோதரன்) பிரான்சிலிருந்து டென்மார்க் வருகிறான்; அங்குள்ள ஹேம்லெட்டை கொல்ல முயற்சிக்கிறான்; அவன் தகப்பனை கொன்றவனைப் பழிவாங்க நினைக்கிறான்;

அங்கு தன் தங்கை ஒபெலியா பைத்தியம் பிடித்தது போல சுற்றிக் கொண்டிருக்கிறான்; காதல் பாட்டு பாடி ரோட்டில் திரிகிறாள்; ஹேம்லெட் மீது காதல்! பைத்தியமாகி இறந்து விடுகிறாள்;

லார்டெஸ்க்கு இரட்டை பலி வாங்க வேண்டும்: தகப்பனை கொன்று விட்டான் இந்த ஹேம்லெட்; தங்கையின் சாவுக்கும் காரணமாகி விட்டான் இந்த ஹேம்லெட்;

ஒரு கட்டத்தில் இருவருக்கும் கத்திச் சண்டை நடக்கிறது; ஆக்ரோஷம்!  லார்டெஸ் தன்னிடமிருந்து விஷம் தோய்த்த கத்தியை வீசுகிறான்; அதில் தப்பித்த ஹேம்லெட், அதே விஷக் கத்தியைப் பறித்து அந்தக் கத்தியாலேயே லார்டெஸை குத்தி விட்டான்! லார்டெஸ் இறக்கிறான்! இறப்பதற்கு முன் கூறுகிறான், நான் ஏற்கனவே இந்த விஷக் கத்தியால் உன்னை குத்தி இருக்கிறேன்; இந்த விஷம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிடும்; நீயும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவாய் ஹேம்லெட் என்று சொல்லிவிட்டுச் சாய்கிறான்;

அங்கு ஹேம்லெட்டின் தாய் வருகிறாள்; மகன், வாள் சண்டையில் ஜெயித்து விட்டான் என்று கருதி, அருகில் இருந்த ஒயின்-ஜூஸை குடிக்கிறாள்; அது ஏற்கனவே, ஹேம்லெட் இறக்க வேண்டும் என நினைத்து அதில் விஷம் ஊற்றி வைக்கப்பட்ட வைன்-ஜூஸ்; இதை சித்திப்பன்-கிளாடியஸ் வைத்திருக்கிறான் என்று தெரியாமலேயே அவனின் தாய் குடிக்கிறாள்; ராணி இறந்து விட்டாள்;

இறப்பதற்கு முன், லேர்டெஸ் சொல்கிறான், உன் தந்தையை உன் சித்தப்பன்தான் கொன்றான்; ஹெம்லெட்டுக்கு கோபம் உச்சிக்கு போகிறது; தன்னிடமிருந்த விஷ கத்தியை எடுத்து சித்தப்பன் கிளாடியஸை குத்துகிறான்; பக்கத்தில் இருந்து ஒயினை எடுத்து சித்தப்பனின் தொண்டைக் குழியில் ஊற்றுகிறான்;
ஹேம்லெட்டின் கடைசி மூச்சு நிற்கிறது;
இராஜ மரியாதையுடன் அவனின் உடல் அடக்கம் செய்யப் படுகிறது;
**




No comments:

Post a Comment